கோவை: வடவள்ளியில் காட்டுப் பன்றிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள வடவள்ளியில், கடந்த சில வாரங்களாகக் காட்டுப் பன்றிகள் கூட்டமாகச் சாலைகளில் உலா வருவதோடு, அப்பகுதி மக்களையும், வாகன ஓட்டிகளையும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்தக் காட்டுப் பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தும் இவை சலிக்காமல் கண்ணில் மண்ணைத் தூவி வருகின்றன.
இந்தப் பன்றிகள், மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் எங்கு இருந்து வண்டிகளின் மீது பாயும் என்றே தெரியாத ஒரு சூழல் அங்கு நிலவி வருகிறது.
வனத்துறையின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ஆகையால் மக்கள் வனத்துறையினரை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வடவள்ளியில் உள்ள 41-வது வார்டுக்கு உட்பட்ட மும்ம நாயக்கர் வீதியில் குட்டிகளுடன் வந்த காட்டுப்பன்றிகள் தெரு நாய்கள் குரைத்தால் பயந்து அங்கும் இங்கும் ஓடின.
இதனால், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களும் அச்சமடைந்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ காட்சிகள்

