கோவை: கோவையை கெடுப்பதற்கென்றே திமுக ஒருவரை கரூரில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் பகுதியில் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பரப்புரையை துவக்கிய அவர் பரப்புரை வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்தார்.
Read news: செந்தில்பாலாஜியை தாக்கிய வானதி சீனிவாசன்…
இந்த நிகழ்வில் மக்கள் மத்தியில் பேசிய வானதி சீனிவாசன், புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக என்று உரையை துவக்கினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உருவான காலத்தில் இருந்து அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது, அந்த வெற்றியை தற்போது பாஜகவும் தொடர போகிறது என்றார்.
திமுக என்ற தீய சக்தியை அழிக்க வேண்டுமென்றால் அதற்கு பலம் பொருந்திய கூட்டணி எடப்பாடி பழனிச்சாமியார் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே என்று கூறினார். தீய சக்தி திமுக கோவையை கெடுப்பதற்கு என்றே கரூரில் இருந்து ஒருவரை இறக்குமதியை செய்துள்ளார்கள் என்று செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர் கொங்கு மண்டலம் எப்பொழுதும் விஷக்கிருமிகளை வளர விடுவது இல்லை என்றும் கடந்த முறை போலவே இந்த முறையும் பத்துக்கு பத்து என்று கொங்கு மண்டல தளபதி எஸ் பி வேலுமணி தலைமையை மக்கள் அடையாளம் காட்டுவார்கள் என்றார்.
Read news: வேட்புமனு நிராகரிப்பு- சாலையில் படுத்து உருண்டு போராட்டம் செய்த கோவை வேட்பாளர்…
இங்கு வந்துள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏன் திமுக வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் ஏன் ஸ்டாலின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும், பெண்கள் பாதுகாப்பு குழந்தைகள் கையில் புழங்கிக் கொண்டிருக்க கூடிய போதைப்பொருள் ஆகியவற்றை பற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
வடக்கு சட்டமன்ற தொகுதியின் அத்தனை தேவைகளுக்கும் பலமிக்க குரலாக சட்டப்பேரவையில் நான் இருப்பேன் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தில் அமையும் பொழுது வடக்கு தொகுதியின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

