கோவை: வெள்ளியங்கிரி மலை செல்ல விதிமுறைகள் அறிவித்துள்ளது வனத்துறை. அதனை இத்தொகுப்பில் காணலாம்.
வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வெள்ளியங்கிரி மலை சென்று வருகின்றனர்.
இதனிடையே மலையேறுவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட வன அலுவலர் கூறியிருப்பது:-
Advertisement

கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட போலாம்பட்டி காப்புக்காடு, பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் பின்வருமாறு:
வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டும் பக்தர்கள் செல்லவும், மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது.
எளிதில் தீபற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ மூட்டக்கூடாது.
அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மரக்கன்றுகள் நடவு செய்தல், மரங்களைச் சேதப்படுத்துதல், கொடியேற்றுதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
வெள்ளிங்கிரி 6வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட செயல்கள் தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ன் படி குற்றமாகும்.