கோவை: ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தை திமுக பிரமுகர் ஒருவர் தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி வடவள்ளி 36வது வார்டில் நகர்ப்புற சுகாதார மைய கட்டடம் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்த வளாகத்தை திமுக பிரமுகர் ஒருவர் தனது குடியிருப்பாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்ட திமுக பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஷியாம் சுந்தர் என்பவர், இந்த சுகாதார மைய கட்டடத்தில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அந்த வளாகத்திற்குள், கிச்சன், பெட்ரூம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, தனது சொந்த வீடாகவே மாற்றியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் நேரடியாகப் புகுந்து ஆய்வு செய்தனர்.
அப்போது, திமுக பிரமுகர் ஷியாம் சுந்தர், அந்த வளாகத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வியெழுப்பியபோது, மருத்துவரின் உத்தரவுப்படியே இங்கு வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி கனிகா கூறுகையில், “நான் ஒரு செவிலியர். எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்த ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தில் வசித்து வருகிறேன். இங்கு வாரம் ஒருமுறை மட்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கும் மருத்துவ முதலுதவிகள் வழங்கி வருகிறோம்.” என்றார்.

