கோவை: தேர்தல் வாக்குச்சாவடி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு செய்முறையாக விளக்கமளித்தார் மாவட்ட ஆட்சியர்.
கோவையில் கல்லூரியில் மாதிரி வாக்கு சாவடியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் கல்லூரி மாணவர்களிடம் வாக்குச்சாவடி எவ்வாறு இருக்கும் அதில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்று செய்முறை விளக்கமாக விவரித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுங்கம் பகுதியிலுள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் (தனியார்) மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது கல்லூரி மாணவிகள் மத்தியில் வாக்குச்சாவடி எவ்வாறு இருக்கும் அங்கே என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் அங்கு எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்து செய்முறை விளக்கமாக கல்லூரி மாணவிகளை வைத்தே விவரித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் வாக்காளர் உறுதிமொழி தேர்தல் வாக்களிப்பு குறித்தான விழிப்புணர்வு ரங்கோலி கோலம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தேர்தல் தொடர்பான குறும்படங்களை மாணவர்கள் மத்தியில் வெளியிட்டு பார்வையிட்டார்.

