கோவை: உதவுவது போல நடித்து கோவையில் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னியம்பாளையம் கிருஷ்ணகவுண்டர் வீதியை சேர்ந்தவர் இந்திராணி (73). இவர் மலுமிச்சம்பட்டியில் இருந்து டவுன் ஹாலுக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது அருகில் இருந்த பெண் ஒருவர் இந்திராணியிடம் செயின் அறுந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்திராணி செயினை கழற்றி பர்சில் வைத்தார்.
பின்னர் பஸ் டவுன்ஹால் வந்ததும் இந்திராணி பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது 2 பெண்கள் அவரது அருகில் வந்து அவரை தள்ளிவிட்டனர். அதில் ஒரு பெண் அவரை தாங்கி பிடித்து கொண்டார்.
பின்னர் 3 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து இந்திராணி தனது பர்சை பார்த்த போது தான் கழற்றி வைத்திருந்த 4 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு உதவுவது போல் நடித்த 2 பெண்கள் செயினை திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்திராணி பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் தங்க நகையை திருடிய 2 பெண்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல கோவை சீரநாயக்கன் பாளையம் திலகர் வீதியை சேர்ந்தர் புஸ்பராஜ். இவரது மனைவி விஜயா (63). இவர் ஆனைகட்டியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றார்.
பின்னர் சாமியை தரிசனம் செய்து விட்டு ஆனைகட்டியில் இருந்து பால் கம்பெனி பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது விஜயா தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை திருடியதை அறிந்த அவர் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

