கோவை: உலக மண் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக மண் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேளாண்துறை சார்பில் மண்ணை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மண்ணியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவில் துவங்கிய இந்த பேரணியை துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மண்ணை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை தலைவர் செல்வி இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவ்வழியாக வந்த பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு பிடித்த மரக்கன்றுகளை இலவசமாக எடுத்துச் சென்றனர்.


