கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஈஷா ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இன்று யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாடு முழுவதும் ஈஷா சார்பில் நடைபெற்ற 2500-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில், 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர் உள்பட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Advertisement

கோவையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43-வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

மேலும் சென்னை ஐ ஐ டி (IIT) வளாகம் மற்றும் ஹெச் டி எப் சி வங்கி, ஐ பி எம் (IBM), கோத்ரேஜ் (Godrej) எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், L&T, மற்றும் எஸ் பேங்க் (Yes Bank) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்புப் படை (BSF) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகியவற்றைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.