கோவை: கோவை அருகே 167 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 167 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், மாதவன், விக்னேஷ், ரஞ்சித் என்பதும் இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலாக்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிஅம் இருந்து 167 கிலோ குட்கா பான்மசாலா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

