கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும், தற்போது பருவ மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை ஆகிய பயிர்களில் மகசூல் இழப்பினை தவிர்க்கும் வகையில் இப்பருவத்தில் காப்பீடு செய்திட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
பயிர்காப்பீடு பிரிமீயத் தொகையாக மக்காச்சோளம்- ரூ.545ம், கொண்டைக்கடலைக்கு ரூ.254-ம். சோளம் ரூ.173-ம், செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் மக்காச்சோள பயிருக்கு அதிகபட்ச காப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.36300, சோளப் பயிருக்கு ஒரு எக்கருக்கு ரூ.11,503, கொண்டைக்கடலை பயிருக்கு ரூ.16,940 வழங்கப்படும்.
மக்காசோளம் பயிருக்கு காப்பீடு செய்திட காலக்கெடு நவம்பர் 30-ந்தேதியும், சோளம் பயிறுக்கு டிசம்பர் மாதம் 16அம் தேதியும் கொண்டைக்கடலைக்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதியும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த பயிர்களுக்கு அந்தந்த பிர்க்காவில் உள்ள விவசாயிகள், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், பயிர்சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவைமையங்கள் மூலமாக உரிய தொகையை செலுத்தி பயிர்காப்பிடு செய்துகொள்ளலாம்.
மழையால் மகசூல் இழப்பு ஏற்படும்பட்சத்தில் உரிய காப்பீட்டு தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.



