நடிகர் கவுண்டமணியின் மனைவி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு முன்பே காமெடியில் கலக்கியவர் நடிகர் கவுண்டமணி. இவரது டைமிங் காமெடி சென்ஸ் மற்றும் நையாண்டிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.செந்தில் – கவுண்டமணி காம்போ என்றாலே, அங்கு சிரிப்பு மழை பொழிந்துவிடும். இருவரிடையே அப்படியொரு கெமிஸ்ட்ரி.
பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகராக இருந்த கவுண்டமனி, கடந்த 1960களில் திரைத்துறையில் கால்பதிக்கத் தொடங்கினார். சர்வர்சுந்தரம் படத்தின் மூலம் திரையுலகில் அறியப்பட்ட கவுண்டமணி, சுமார் 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். ரஜினி, கமல் முதல் தற்போதைய நடிகர்கள் வரை இணைந்து நடித்துள்ளார்.
இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 67 வயதான அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை இறுதிச் சடங்கு நடக்கும் என்று தெரிகிறது.
கவுண்டமணி-சாந்தி இருவரும் காதலித்து கடந்த 1963ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.