கோவை: சிங்காநல்லூர் மற்றும் துடியலூரில் இரண்டு வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூரை அடுத்த குருடம்பாளையத்தில் வசிப்பவர் நடராஜன் (48). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டிக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement

இது குறித்து நடராஜன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி கங்கா நகரைச் சேர்ந்தவர் புவனேஷ்(31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார்.
சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று கோவை திரும்பினார். வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் உடைமைகள் சிதறி கிடந்தன. உள்ளே பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த புவனேஷ் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.