Operation Clean Kovai: கோவையில் இந்த பகுதிகளில் தான் போதை புழக்கம் அதிகம்; எச்சரித்த எஸ்பி!

கோவை: கோவையில் Operation Clean Kovai என்ற பெயரில் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி, போதைப் பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்ததோடு, பலரை கைத் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வண்ணம் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள், மற்றும் தனி அறைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சோதனைகளில் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், செட்டிபாளையம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் Operation Clean Kovai என்ற பெயரில் 412 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதி அறைகளில் மேற்கொண்ட இந்த சோதனையில் குட்கா, கஞ்சா, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சோதனையில் 13 பேரை கைது செய்துள்ளோம். சந்தேகத்திற்குரிய 55 பேரையும் பிடித்துள்ளோம். இந்த சோதனையில் 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போலியான பதிவு எண், முறையான ஆவணங்கள், பதிவு எண் இல்லாத 46 இருசக்கர வாகனங்கள், மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Operation Clean Kovai என்ற திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குற்றப் பின்னணி உள்ளவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கோவையில் அடைக்கலம் புகுந்துவிடுகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்றன

தற்போது பிடிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் சூடான் நாட்டை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

விசாரணை முடிந்த பிறகு தான் போதை பொருட்கள் எங்கிருந்து வந்தது? இதில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள்? என்பது பற்றி தெரியவரும். மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சோதனையில் paytm போன்ற மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவையைப் பொறுத்தவரை செட்டிபாளையம், மதுக்கரை, சூலூர், நீலாம்பூர், கேஜி சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தான் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளன.

இதில் கல்லூரியில் இருந்து இடை நிற்றல் செய்த மாணவர்களும் இருப்பதாக தெரிவித்த அவர் இது போன்று வழி தவறி செல்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி மீண்டும் படிப்பை தொடர்வது போன்றவற்றிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

கொடுங்குற்றங்கள் செய்பவர்கள், கஞ்சா விற்பனை டீலர்கள் ஆக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்தான விழிப்புணர்வை கல்லூரிகளிலும் விடுதிகளிலும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...