13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

கோவை: கோவையில் 13 மாத கருவுடன் பெண் யானை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயராஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 13 மாதங்களே ஆன பெண் யானை கரு இருந்ததும் கண்டறியப்பட்டது.

யானையின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து வனத்துறை தரப்பில் கூறுகையில், உயிரிழந்த யானையின் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாகச் சேதம் அடைந்து உள்ளன.
கடந்த சில வாரங்களாக அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்து உள்ளது.

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

இந்த யானை தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி தவித்த போது வனத்துறையினரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp