கோவை: கோவையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிளர்க்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பட்டா பெயர் மாற்றத்திற்காக அணுகிய ஒரு நபரிடம், ஹரிஹரன் 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சப் பணத்தைக் கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியப் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய ஆலோசனைப்படி இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஹரிஹரனிடம் அந்த நபர் வழங்கிய போது, அலுவலகத்தின் பதிவு அறை (Record Room) வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஹரிஹரனை வளைத்துப் பிடித்தனர்.
லஞ்சம் வாங்கியதை உறுதி செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

