கோவை: பழக்கடை, உணவகம் என்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் தான் என்றும் செந்தில் பாலாஜி பெயிலில் வெளியில் இருக்கிறார் ஆனால் நான் திறந்த புத்தகம் என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரவாக்க சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் நாள்தோறும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்றும் பிள்ளையார் கோவில் வீதி, பட்டு நூல் சந்து, கிருஷ்ணப சந்து, தியாகி குமரன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது காய்கறி மற்றும் பழ வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்த அவர் அதிமுக ஆட்சி அமைந்ததும் நவீனமயமாக்கப்பட்ட மார்க்கெட் அமைத்துக் கொடுத்து நல்ல வருமானம் ஈட்டித் தரும் வகையிலும் விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் செய்கிறோம் என்று தெரிவித்தார்.

எடப்பாடியார் ஆட்சியில் கஞ்சா இல்லாத ஊராக நமது ஊர் இருக்கும் என்றும் பாலியல் தொல்லை இருக்காது, பெண்கள் அனைவரும் தைரியமாக இருக்கலாம், என்று பெண்கள் மத்தியில் தெரிவித்த அவர் இவை அனைத்தும் களைய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்றும் தனக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் எப்பொழுது சிறைக்கு செல்வார் என்று தெரியாது அவர் பெயிலில் தான் வெளியில் இருக்கிறார், வாக்களிப்பதற்குள் சிறைக்குச் சென்றாலும் சென்று விடுவார், ஆனால் நான் சுத்தமான திறந்த புத்தகம் என்று தெரிவித்தார். ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் பிரச்சார வாகனத்தில் பேசிய அவர் இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் தான் என்றும் நான் ஜனநாயகத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன் மாற்று வேட்பாளர் பணநாயகத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார் என்று தெரிவித்தார்.

