கோவை: ஆனைமலை மலைவாழ் மக்கள் சுய தொழில் பெற நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை சுற்றியுள்ள மலைவாழ் பகுதிகளில் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் உண்ணிக்குச்சியின் மூலம் லாந்தனா உயிரி எரிபொருள் உற்பத்தி தொழில் செய்ய யுனியன் வங்கியின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட வனம் சார்ந்த பகுதிகளில் உண்ணிக்குச்சி அதிக அளவில் கிடைக்கும் பகுதிகளான நாகர் ஊற்று-1 நாகர் ஊற்று 2.கீழ்பூனாச்சி, சின்னார்பதி, சர்க்கார்பதி மற்றும் எருமைப்பாறை ஆகிய பழங்குடி குடியிருப்புகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் அவரது சிறப்பு முயற்சியின் பேரில், லாந்தனா உயிரி எரிபொருள் தாயரிப்பதற்குண்டான அதிநவீன அறவை இயந்திரம் வாங்க கோவை மண்டல யுனியன் வங்கியின் சார்பில் 13.60 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் யுனியன் வங்கி மண்டல தலைமை மேலாளர் ராஜ்குமாரன் வழங்கினார்.
இப்பணிகள் அனைத்து தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஒருங்கினைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சிறப்புமிகு நடவடிக்கையின் மூலம் வனத்தை சார்ந்த வாழ்விடங்களில் வசிக்கும் 87 மலைவாழ் பழங்குடி குடும்பங்கள் சுயதொழில் பெற்று பயன்பெறுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

