வ.உ.சி பூங்காவில் நீச்சல் குளம்- கோவை மாநகராட்சி அறிவிப்பு…

கோவை: கோவை வ.உ.சி பூங்காவில் நீச்சல்குளம் அமைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி.பூங்கா வளாகத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஹாக்கி வீரர்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு மைதானம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டது.

மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகில் மாநகராட்சி விளையாட்டு திடலில், ரூ.195 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் மற்றும் அதே பகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சர்வதேச கபடி உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் முதற்கட்டமாக உலக தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு இந்த உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

Advertisement

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் மையப்பகுதியான வ.உ.சி.மைதானம் பகுதியினை சுற்றி செம்மொழிப்பூங்கா, வ.உ.சி விளையாட்டு மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளி, உடற்பயிற்சி கூடம், கால்பந்து விளையாட்டு மைதானம். கூடைப்பந்து விளையாட்டு மைதானம்.

சிறுவர்கள் விளையாடும் இடம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதியில் நீச்சல் குளம் அமைக்கவேண்டுமென பொதுமக்களின் கோரிக்கையின் படி, மாநகராட்சி பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக 1.94 கோடி மதிப்பீட்டில், நீச்சல் குளத்திற்கான மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் உடற்திறன் மற்றும் உடற் தளர்வு மேம்படுத்தும் வகையிலும் புதிதாக நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே பயன்படுத்தும் வகையில் குளிக்கும் வசதி உடை மாற்றும் அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்திடும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென்றும்.

குழந்தைகளுக்கு என தனியே சிறப்பு நீராடல் இடம் அமைக்கப்பட உள்ளது என்றும் நீரின் தரம் மற்றும் குளோரின் அளவுகள் சரிபார்க்கும் வகையில் தொட்டிகள், 50 எண்ணிக்கையிலான இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் மற்றும் 25 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர்கள் என சுழற்சி முறையில் ஒரு நாளுக்கு 500 நபர்கள் குளிக்கும் வகையில் குளமானது அமைக்கப்பட உள்ளது என்றும் இந்த நீச்சல் குளமானது 13.5 மீட்டர் அகலம் 25 மீட்டர் நீளம் என்ற அளவில் அமைக்கப்படுகிறது. இதன் ஆழமானது 12 மீட்டர் முதல் 18 மீட்டர் வரை இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அடுத்த சிறப்பு வாய்ந்த நிகழ்வாக நீச்சல் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில், இப்பகுதியில், மாநகராட்சியின் பொது நிதி, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதி (CSR) ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், நீச்சல் வீரர்கள் முறையாக பயிற்சி பெறும் வகையிலும் மற்றும் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தும் வகையிலும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கவுண்டம்பாளையம் அருகே காவலரின் மிரட்டல் வீடியோ வைரல்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே அபராத விவகாரத்தில் காவலர் மிரட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp