கோவை: திமுகவினர் வாக்காளர்களை பட்டியில் ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போன்று அடைத்து வைத்துள்ளார்கள் என அதிமுக வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது புகார் மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமாரிடம் நேரடியாக வழங்கினார். தெற்கு தொகுதியில் வாக்காளர்களை பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மன் அர்சுணன், கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது போன்று தெரியவில்லை, பல்வேறு பகுதிகளில் பட்டி அமைத்து மக்களை ஆடு மாடுகளைப் போன்று அடைத்து வைத்துள்ளார்கள் நாளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் அதற்கு பொறுப்பு ஏற்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு டிவிஷனில் ஐந்து கூடாரங்கள் அமைத்துள்ளதாகவும் கிராமங்களில் நடைபெறுவதை ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டியில் நடத்துவதாக விமர்சித்தார். மக்களுக்குள் பிரிவினை ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால் என்ன ஆவது என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல் வடக்கு தொகுதியிலும் இதுபோன்று நடைபெறுவதாகவும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்று பட்டி அமைக்கப்படுவதாக தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் ஒரு வார்டுக்கு மூன்று இடங்களில் இது போன்று அமைத்துள்ளதாக கூறினார். நாங்கள் ஜனநாயகத்தை நம்புபவர்கள் அதனால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறிய அவர் அப்படி இருக்கும் பொழுது தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எண்ணவில்லை, நாங்கள் திறந்த புத்தகமாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மக்களை சுதந்திரமாக விட வேண்டும் என்றார்.
மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் பட்டி அமைப்பதை எல்லாம் எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். 1957ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறுகிறது கோவை இதுபோன்று இருந்தது இல்லை என்றார். ஒவ்வொரு பட்டியிலும் 300 பேரை அடைத்து வைத்து உணவு, சம்பளம் ஆகியவை வழங்கப்படுவதாகவும் தங்களுக்கு ஆதரவாக எந்த வாக்காளர்களும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்வதாக கூறினார்.
இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து இருப்பதாக கூறினார். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, நான் முதல் முறை என்பதால் புகார் மனுவாக அளித்துள்ளேன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த நகர்விற்கு செல்வோம் என்று தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் காலத்திலும் காவல்துறையினர் அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாகவும் நேற்று கூட ஒருவர் திமுகவினர் மீது புகார் அளித்ததற்கு புகார்தாரரின் வீட்டு பெண்களிடம் ஏன் புகார் அளித்தீர்கள் என்று விசாரணை நடத்துகிறார்கள் என்றும் திமுகவினர் மிரட்டியதால் பெண்ணும் பயந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.
திமுகவினருக்கு தோல்வி பயம் வந்து விட்டதாகவும், இவ்வாறு செய்து கொண்டிருந்தால் டெபாசிட் இழக்கின்ற நிலைக்கு செல்வீர்கள் என்று தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் அதை விட்டுவிட்டு ஆட்டு கொட்டகைகள் போல மக்களை அடைத்து வைத்து பணத்தால் ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் அதற்கு அடிபணிய மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
கரூரில் செய்ததை இங்கு செய்யலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அது நடைபெறாது என்று தெரிவித்தார். கரூரில் தேர்தல் நாள் அன்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் பத்து ரூபாய் பாலாஜி என்று வேறு ஒருவர் வேண்டுமானால் கூறிக் கொள்ளட்டும் ஆனால் அவர் டோக்கன் பாலாஜி என்று விமர்சித்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் பொய் வாக்குறுதிகளையும் டோக்கனங்களையும் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றியதாகவும் கூறினார்.
திமுக ஐடி விங்க் நான் தோற்றால் கவுரவமாக தோற்பேன் என்று ஒரு பதிவை போட்டுள்ளார்கள் நான் ஏன் தோற்கப் போகிறேன் நான் தான் உறுதியாக ஜெயிப்பேன் என்று தெரிவித்தார். தொழில் பயத்தால் தான் ஐடி விங்க் இவ்வாறு பதிவுகளை பதிவு செய்வதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் பதிவு போடுகிறார்கள் வேண்டுமென்றால் என்னுடன் அவர்கள் நடந்து வரட்டும் நான் கெத்தாக ஜெயிப்பேன் என்று தெரிவித்தார்.
கோவையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்ற பெயரை வாங்குவேன் அதை ஊடகங்களும் சொல்லும் என்று தெரிவித்தார். பட்டிக்குள் நுழையும் போராட்டம் ஏதாவது நடத்தப்படுமா என்ற கேள்விக்கு சரியான நடவடிக்கையை தேர்தல் அலுவலர்கள் எடுக்கவில்லை என்றால் தலைமையிடம் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டத்தை தொடருவேன் என்று கூறினார். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டால் எதற்காக பட்டியடிப்பதற்கு விடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறினார்.
சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என்ன நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தாலும் எனக்கு பயம் இல்லை என்று கூறினார். மேலும் கோவை மாவட்ட திமுக சகோதரர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது என்றும் சுயேட்சை வேட்பாளராக நிற்க வைப்பதற்கு கூட அவர் உங்களை நம்பவில்லை கோவை மாவட்ட திமுகவினருக்கு சுயேட்ச்சையாக நிற்பதற்கு கூட அருகதை இல்லையா அதற்கு கூட கரூரில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலும் மக்கள் அவரை வெற்றி பெற விட மாட்டார்கள் என்றார். நான் ஆரம்பத்தில் கூறியது தான் எப்பொழுதும் கூறுகிறேன் நான் மக்களை நம்பி செல்கிறேன் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது, உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை மக்கள் வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
பணநாயகம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை என்று கூறிய அவர் பணநாயகம் வெல்லும் என்றால் அம்பானி அதானி டாட்டா பிர்லா போன்றவர்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளலாமே எதற்காக ஆயிரம் கோடி அளவிற்கு தேர்தல் ஆணையம் செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நான் 17 வயதில் கோவைக்கு வந்தேன் அப்பொழுது செந்தில் பாலாஜி கரூரில் கூட பிறக்கவில்லை, எனக்கு ஒரு ராசி உள்ளது அப்பொழுது நான் கட்சியில் எல்லாம் இல்லை நான் இங்கு வரும்பொழுது திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்கள் என்றும் திமுக மாநாட்டை மிகவும் காட்சி பொருளாக காட்டினார்கள் அப்பொழுது இந்திரா காந்தி திமுக கட்சியை டிஸ்மிஸ் செய்தார் என்று தெரிவித்தார்.
யாருக்கும் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும் அதனால் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் அதை போல் அவர் அவரது தொகுதியில் போட்டியிடலாமே? கரூரில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றவர் தானே செந்தில்பாலாஜி என்று கூறிய அவர் செந்தில்பாலாஜியின் டோக்கன் அங்கு விலை போகாது உங்கள் பப்பு அங்கு விலை போகாது என்று தெரிவித்தார்.
கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என்று இங்கு வந்துள்ளார் ஆனால் கோவை மக்கள் அதிக அறிவு படைத்தவர்கள் அமைதியானவர்கள் இங்கு அமைதி வளம் வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள் கோவை மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் ஆனால் அவர் ஏமாறுவது மே மாதம் நான்காம் தேதி என்று தெரிவித்தார்.


