கோவை: ஓடும் ரயிலில் பயணியிடம் நகை திருடிய சிறுவன் மற்றும் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி (57). இவர் தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரயிலில் கோவை வந்து கொண்டு இருந்தார். ரயில் போத்தனூர் அருகே வந்து கொண்டு இருந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து கொண்டு இருந்த பேக்கை சிறுவன் ஒருவர் நைசாக எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இசக்கியின் மகன் முத்து தனது தந்தை இசக்கியிடம் தெரிவித்தார். அவர் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார். உடனே அந்த சிறுவனுக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் வந்து இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இசக்கி ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து இழுந்து ரயிலை நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அந்த அந்த வாலிபர் இசக்கியை தாக்கி சிறுவனுடன் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த இசக்கி உடமைகளை சோதனை செய்து பார்த்தார். அப்போது 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ரயில் சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு ரயில்வே ஊழியர் சென்று விசாரித்தனர். இசக்கி நடந்தவற்றை அவர்களிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் ரயில் 17 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. ரயில் போத்தனூர் வந்ததும் இசக்கி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கியை தாக்கி நகைகளை திருடி சென்றவர்களை தேடி வந்தனர். அதில் போத்தனூர் செட்டிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த உஜாத் அலி (31), அவரது மனைவி சத்யா (25) மற்றும் அவர்களது உறவினர் 12 வயது சிறுவன் ஆகியோர் நகைகளை திருடி சென்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
அப்போது அவர்கள் செட்டிப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை மடக்கி படித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்டனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.



