கோவை: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ-வில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். 6 கி. மீ தூரம் திரண்டிருந்த மக்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.
திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின் நேற்று காலையில் ஈரோட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கோவை புறப்பட்ட அவர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை அங்கிருந்து திறந்த வேனில் நின்று கை அசைத்தவாறு ரோடு ஷோ-வில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அவினாசி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், முதல்வரை வரவேற்று மேளம், தாளம் முழங்க, உற்சாக கோஷமிட்டனர்.
சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக மக்கள் கூடியிருந்து வரவேற்பளித்தனர்.
பின்னர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரை ஆற்றினார்.

