கோவை: கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன.

இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை ஹெலிகாப்டர், குளத்தின் மேலே தாழ்வாக பறந்து ‘பாம்பி பக்கெட்’ எனப்படும் ராட்சத கலன்கள் மூலம் தண்ணீரைச் சேகரித்தது. பின்னர், அந்தத் தண்ணீரை விமானப்படைத் தளத்திற்கு எடுத்துச் சென்று அங்கு அமைக்கப்பட்டு உள்ள கொள்கலன்களில் நிரப்பி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்ட காட்சியைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கரையோரங்களில் திரண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, விமானப்படைப் பிரிவினர் குளத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர்.

