கோவை: கோவையில் தவித்த மாற்றுத்திறனாளி இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆர்எஸ் புரம் பகுதியில் பிங்க் பேட்ரோல் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் தனக்கு காது கேட்காது என்றும், வீட்டில் கூறாமல் ரயில் மூலம் கோவை வந்ததாகவும், சிறிது நேரம் அங்கு சுற்றிவிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டு
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் கருப்பையா அங்கு சென்று அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்து விசாரித்து வந்தார்.
கண்டித்ததால்
அதில் அந்த இளம்பெண் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சுபர்னா தாஸ் (34) என்பதும், அவரது பெற்றோர் அவரை அடிக்கடி கண்டித்து வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் கோவைக்கு 3ம் தேதி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் கொல்கத்தா போலீசில் புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகள் கோவையில் ஜெயமால் தாஸ் இருக்கும் தகவலை கொல்கத்தா போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து கோவை வந்த சுபர்னா தாசின் உறவினர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

