கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம்- ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள்

கோவை: கிழக்கு புறவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மனோ அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அந்த திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுமார் 1,400 ஏக்கர் நிலம் பாதிக்கப்படுவதுடன், 4,000 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிவித்தனர்.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு குரும்பபாளையம் முதல் சத்தி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 2,000 ஏக்கர் நிலம் பறிக்க திட்டமிட்டனர். அதை எங்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தினோம். இப்போது அதே போன்று புறவழிச் சாலை பெயரில் விவசாய நிலங்களை பறிக்க அரசு முனைவது புரியவில்லை என்றனர்.

இருக்கும் சாலைகளை விரிவுபடுத்த போதுமான இடம் உள்ள நிலையில் அதை விடுத்து, டோல் கேட் அமைத்து வசூல் செய்வதற்காகவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரியல் எஸ்டேட் காரர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக திட்டம் வகுக்கப்படுகிறது. ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு சென்டு நிலமும் எடுக்கப்படவில்லை. முழுக்க, முழுக்க விவசாயிகளின் நிலங்களையே குறிவைத்து செய்கிறார்கள் என சாடினர்.
நான்கு ஏக்கர், மற்றும் அதற்கு குறைவான நிலத்தில் வாழ்ந்து வரும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரமே குலைவதாக இருக்கும். உயிரையே இழந்தாலும், எத்தனை கோடி கொடுத்தாலும், எங்களுடைய நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று உறுதியுடன் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள், திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தி கலைந்து சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video