கோவை: கேஸ் தட்டுப்பாடு தட்டுப்பாடு காரணமாக சாலையோர கடைகள் மூடப்பட்டுள்ளதால், வெளியூரில் இருந்து கோவை வந்துள்ள தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் காரணமாக இந்தியா உட்பட சில நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவுகிறது. பெரிய ஓட்டல்களில் சில குறிப்பிட்ட உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
நீண்ட நேரம் வேக வைக்கக் கூடிய உணவுப் பண்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொழில் நகரமான கோவையில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கல்வி, வேலைக்காக ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
கடைகள் மூடல்
இதில் பெரும்பாலான தொழிலாளர்கள், பேச்சுலர்கள், கல்லூரி மாணவர்கள் உணவகங்களில் தங்களது தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டால், கோவை ரேஸ்கோர்ஸ், வ.உ.சி. பூங்கா பகுதி, காந்திபுரம், பீளமேடு, உக்கடம், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த தள்ளுவண்டி உணவு கடைகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.
Read also: Fish price Coimbatore | கோவையில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு
திறந்திருக்கும் பெரிய ஓட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களிலும் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. ரூ.15-க்கு விற்பனை செய்து வந்த தோசை, ஆம்லெட் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஒரு நேர உணவுக்கு மட்டும் கூடுதலாக ரூ.30 செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் ஓட்டலை நம்பி உள்ள சாமானியர்கள் அவதியை சந்தித்து வருகின்றனர். மேலும், ரூ.1,990-க்கு விற்பனை செய்து வந்த வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கள்ளச்சந்தையில் பதுக்கி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக பெரிய ஓட்டல் நிர்வாகத்தினர் சமாளித்து வந்தாலும், சிறிய உணவகம் நடத்துபவர்களால் சமாளிக்க முடியவில்லை. பலர் கடைகளை மூடி விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
அவர்கள் நிலைமை சீரான பின்பு வந்து மீண்டும் தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!
எங்களால் முடியவில்லை
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சொந்த கட்டிடத்தில் உணவகம் நடத்தி வருபவர்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். ஆனால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறுவது கடினம். புகை மற்றும் கரி சுவற்றில் படிவதால், கட்டிட உரிமையாளர்கள் விறகு அடுப்பை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. எனவே, எப்போது சிலிண்டர் தட்டுப்பாடு தீரும் என்ற எதிர்பார்ப்பில் உணவக உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்’’ என்றார்.

