கோவை: மனைவி டெல்லிக்கு சென்றதால், கோவையில் வசித்து வந்த நேபாள வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் மில்லன் ராவத் (26). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து, குனியமுத்தூர் மணிகண்டன் நகரில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது, அவர் ஒடிசாவைச் சேர்ந்த மனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனிஷா கேரளாவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், மனிஷா வேலைக்காக டெல்லி செல்ல உள்ளதாக தனது கணவர் மில்லன் ராவத்திடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, கேரளாவிலேயே பணிபுரியுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மனிஷா அதனை கவனிக்காமல் டெல்லி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மில்லன் ராவத், வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மில்லன் ராவத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

