கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து தேர்தலுக்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் கடத்தப்படுகிறதா? என போலீசார் ஆய்வு செய்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் யாரும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு என 180 குழுவினர் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். இது தவிர கட்சியினர் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லும் பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். தொழில் நிமித்தமாக பணம் கொண்டு செல்பவர்களிடம் பறிமுதல் செய்வது வியாபாரிகளிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், தற்போது கேரளாவில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கோவை வழியாக கேரளாவிற்கு ஏராளமான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை ரயில் மூலம் கடத்தப்படுதை தடுக்க போலீசார் கோவை ரயில் நிலையத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் திறந்து பார்த்து சரி பார்த்தனர்.
சோதனை

மேலும் ரயில் பெட்டிகளில் ஏறி அங்கிருந்த பயணிகள் உடைமைகள், ரயிலில் கொண்டு செல்லப்படும் பார்சல்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த பணியில் கோவை ரயில்வே போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல், மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்தும் அங்கும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவைக்குள் நுழையும், வெளியேறும் வாகனங்களில் வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் காரணமாக அசாம், மேற்கு வங்கத்தை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.
இவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர ரயில்களில் வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறதா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

