கோவை: அதிவேகம் காரணமாக கோவையில் கடந்த மாதம் 28 நாட்களில், விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதிவேகம், மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குண்டும் குழியுமான சாலை ஆகிவற்றால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
28 பேர் உயிரிழப்பு

அதேபோல அஜாக்கிரதையால் விபத்தை ஏற்படுத்தும் நபர்களை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகரில் அதிவேகம் காரணமாக கடந்த மாதம் 28 நாட்களில் 28 பேர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகரில் விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை 28 நாட்களில் அதிவேகத்ததலும், அஜாக்கிரதையாலும் 28 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அஜாக்கிரதை
அதிக வேகமாக சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. கடந்த மாதம் தேவராயபுரத்தைச் சேர்ந்த பொங்கே கவுண்டர் (55) என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மினி பஸ்சில் சிக்கி உயிரிழந்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் ஸ்கூட்டலில், மினி பஸ்சை மிகவும் அருகில் பின்தொடர்ந்து வந்து தடுப்பு சுவரை ஒட்டி முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது ஸ்கூட்டரின் கைப்பிடி தடுப்பில் மோதி அவர் கீழே விழுந்து, பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கோவர்தனா மணிபாரதி (18), கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு பைக்கில் செல்லும் போது ஓம்னி பஸ்சில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் வேகம் காரணமாக உயிரிழந்தார்.
சமீப காலமாக மதுபோதையில் ஓட்டுவதைக் காட்டிலும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகமாகி உள்ளது. இது பலர் அவசரமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை காட்டுகிறது.
அதி வேகம்
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் உயிரிழப்பது கவலை அளிக்கிறது. இரவு 10 மணிக்குப் பின்னர் போக்குவரத்து விதிகள் இல்லை என்ற எண்ணத்தில் சிலர் விதிகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனாலும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எந்த நேரமும் வாகனம் ஓட்டினாலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் அதிகபட்ச வேகம் 40 கி.மீ-ஆக இருக்க வேண்டும். வாகனங்களை மிக அருகில் பின்தொடர்வது, திடீர் பிரேக் மற்றும் அதிக வேகம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
பிப்ரவரி மாதத்தில் விபத்தில் உயிரிழந்த 28 பேரில், 8 பேர் லாரி மற்றும் பஸ்சில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 6 பேர் கனரக வாகனங்களின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அதேபோல முதியவர்கள் இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் இயக்கி விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.
வீடுகளில் உள்ள முதியவர்களை போக்குவரத்து நிறைந்த சாலையில் வாகனங்களை இயக்க அனுமதிக்காமல் குடும்பத்தினர் பார்த்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே
பெற்றோர் தங்களது 18 வயது நிரம்பாத, ஓட்டுனர் உரிமம் இல்லாத குழந்தைகளை வாகனங்களை இயக்க ஊக்குவிக்கக் கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும். மாணவர்கள் வாகனங்களை முறையாக வைத்துள்ளார்களா? என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும், மிதவேகம், ஹெல்மெட் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை உங்கள் வீட்டு செல்லக் குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திடுங்கள் வாசகர்களே…

