கோவை: தி.மு.க கவுன்சிலர்கள் கரூர்காரருக்கு வசூல் ஏஜெண்டுகளாக உள்ளனர் என்றும், எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவை சிங்காரமாக இருந்தது என்றும் பிரச்சாரத்தின் போது வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று கணபதி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சியின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவையில் சுகாதாரம் பேணப்பட்டு, சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் ஒழுங்காக இருந்தன.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கரூர்காரருக்கு வசூல் ஏஜெண்ட்களாக உள்ளனர். மக்களுக்கு என்ன தேவை என்று பார்த்து செய்பவர்கள் இல்லாதவர்கள் தான் இன்று கவுன்சிலர்களாக உள்ளனர்.
தி.மு.க கவுன்சிலர்களால் இந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகள், சாலைகள் ஒழுங்காக இல்லை. எந்த வேலையைச் சொன்னாலும் பணம் வாங்கிக் கொண்டே செய்கின்றனர்.
அதனால் வீடு கட்டுவதற்குக் கூட தி.மு.க கவுன்சிலர்கள் கொள்ளை அடிப்பதை பார்த்து, வீடு கட்டலாமா? வேண்டாமா? என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமை மாற வேண்டுமெனில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும்.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.

