கோவை: சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்கள் என 3 நாட்களும் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து பலரும் பல்வேறு மாவட்டங்களுக்கு புறப்பட்டனர்.
சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனை அடுத்து சனி, மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களும் வருவதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருகிறது. இதனால் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல துவங்கி உள்ளனர்.
அதன்படி கோவையிலும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இங்கு பணிபுரிபவர்களும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகளும் அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் ரயில் நிலையம் மற்றும் உக்கடம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் வழக்கமான கூட்டத்தை விட சற்று அதிகமாக காணப்படுகிறது.
பலரும் பேருந்துகளில் முந்தி சென்று இடம் பிடிக்கின்றனர். இதனால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.