கோவை: கோவையில் விபத்தில் சிக்கி முதியவர் பலியானது தொடர்பாக கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு விநாயக நகரை சேர்ந்தவர் பரத்(32). இவர் நேற்று காரில் சதீஷ்குமார் (25) என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காளப்பட்டி ரோடு பீளமேடு இந்திராநகர் அருகே காரை ஓரம் கட்டிய பரத் இடது புறமாக நிறுத்தினார்.
அப்போது பின்னால் அமர்ந்திருந்த சதீஷ்குமார் திடீரென காரின் பின்பக்க வலது கதவை திறந்தார். அப்போது பின்னால் ஸ்கூட்டரை ஓட்டி வந்த காளப்பட்டி அசோக் நகரை சேர்ந்த பெரியசாமி(62) என்பவர் கார் கதவில் மோதி கீழே விழுந்தார்.
தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்தவர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கார் ஓட்டுனர் பரத் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் கதவை திடீரென திறந்ததால் ஸ்கூட்டரில் வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கார் கதவைத் திறந்து இறங்கும் முன்பு பின்னால் வாகனங்கள் ஏதேனும் வருகிறதா என்பதை பார்த்துவிட்டு இறங்குங்க ப்ளீஸ்…