கோவை: கோவை நரசிபுரம் பகுதியில் வீட்டிற்குள் புக முயன்ற யானையை விரட்ட வந்த வனத்துறை வாகனம் பழுதடைந்ததால் மக்கள் அச்சம் கொண்டனர்…
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மதுக்கரை ,ஆனைகட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகளை நடமாட்டம் காணப்படுகிறது. கோடை காலம் முடிந்து தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கிள்ள நிலையில் வனப்பகுதியில் புற்கள் முளைக்க துவங்கி உள்ளதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதிக்குள் கிடைத்து வருகிறது.
எனினும் ஒரு சில யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தியும் பயிர்களை சாப்பிட்டும் வருகிறது. இதன் இடையே தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை சுற்றி வருகிறது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து அங்கு செல்லும் யானை வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும், ரேஷன் அரிசி மற்றும் மாடுகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறது.
Advertisement

இந்நிலையில் அதிகாலை நரசிபுரம் அடுத்த வைதேகி நீர்வீழ்ச்சி செல்லக் கூடிய பகுதியில் உள்ள விவசாயி பாலு என்பவரின் வீட்டின் காம்பவுண்ட் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஒற்றை யானை வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த தவிடு மற்றும் நிலக் கடனையை சாப்பிட்டது. மேலும் வீட்டின் வாயில் படியில் யானை நிற்பதை பார்த்த பாலுவின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இதனை அடுத்து போளுவாம்பட்டி வனத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். தொடர்ந்து வெளியில் சென்று இருந்த விவசாயி பாலு வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பு யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும் யானை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் வனவர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து உள்ளனர். அப்போது பாலுவின் வீட்டிற்கு அருகே வந்தபோது வனத்துறையின் ஜீப் பழுதானது.
இதனை அடுத்து அங்கு இருந்து செல்ல முடியாமல் இருந்த வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தங்களுடைய வாகனத்தில் வனத் துறையினரை அழைத்து சென்று யானையை விரட்டினர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தங்களுடைய கிராமம் அமைந்து உள்ளதால் எப்போதும் யானைகளில் நடமாட்டம் காணப்படும். இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது வீடுகளை குறி வைத்து யானைகள் வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி மற்றும் மாடுகளுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு தவிடுகளை சாப்பிடுவதற்காக வீட்டில் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இது தவிர யானையை விரட்ட வரும் வனத் துறையினருக்கு சரியான வாகனங்கள் இல்லாததால் அவர்களால் யானையை விரட்ட முடிவதில்லை யானை விரட்ட ஒதுக்கப்படும் வாகனங்களை முறையாக பராமரிக்காததால் வாகனம் பழுதடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் வீடுகளை நோக்கி வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.