கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார், 200 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பெயரில், கோவை மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் உத்தரவுபடி, சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையர் வழிகாட்டுதலின் பேரில் கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், இது தொடர்பான தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அஸ்வின் குமார் (வயது 34) என்பவர் அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் சப்ளை செய்து வருவதாக ஆய்வாளர் வெற்றிச்செல்விக்குக் ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்த விசாரணையில், தடாகம் சோமையனூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் 200 கிலோ பெருமான புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அஸ்வின்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிலோ குட்கா போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

