கோவையில் கொடூரம்! பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு!

கோவை: கோவையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெஞ்சை ரணமாக்கியுள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி- வீரியம்பாளையம் செல்லும் சாலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் உடல் கை-கால்கள் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது.

இடுப்புக் கீழ் பாகங்களே இல்லாமல் இருந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர், குழந்தைகள் நல மைய அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் கால்கள் மற்றும் கைகள் அங்கு சுற்றித் திரியும் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், குழந்தையின் பெற்றோர் யார்? எவ்வாறு குழந்தை அங்கு வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சுக் குழந்தை உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Recent News

Video

Join WhatsApp