கோவை: கோவை, சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை, சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் வெள்ளலூர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இதைத்தொடர்ந்து புகார்களை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் வந்த காவல் துறையினர்
இந்த தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அலுவலக வளாகத்தில் இருந்த இடைதரகர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.
சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் எப்படி வந்தது ? என்பது குறித்தும், பணத்தை அங்கு போட்டவர் யார் ?என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட, நிலையில் தற்போது மீண்டும் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.