கோவை: அதவ் அர்ஜுனாவின் முட்டாள் தனத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தொழிலதிபர் மார்ட்டினின் மகனும், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் அறிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மார்ட்டின். இவரது மருமகனான ஆதவ் அர்ஜுனா வி.சி.க.,வில் இருந்து விலகி, சமீபத்தில் விஜய்யின் த.வெ.க.,வில் இணைந்தார்.
அவர் பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், மார்ட்டினின் மகனும், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் கூறிய கருத்துக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்” என்ற அண்ணாமலையின் கூற்றையும் நான் ஆதரிக்கிறேன்.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தனது அரசியல் மற்றும் பண பேராசையைப் பூர்த்தி செய்ய சீரற்ற அரசியல் கட்சிகளில் இணைகிறார்.
அவரது முட்டாள்தனத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.
இவ்வாறு ஜோஸ் சார்லஸ் அறிவித்துள்ளார்.