கோவை: கோவையில் இருசக்கர வாகனங்களைத் திருடி, அதனைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் கால்கள் உடைந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
Advertisement

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தீவிரம் காட்டிய தனிப்படை
குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளிலிருந்த பல்வேறு CCTV கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதிலிருந்து இரண்டு நபர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து, கருப்பு மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதும், திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
தனிப்படையினர் CCTV கேமரா பதிவுகளில் உள்ள அடையாளங்களை வைத்தும், குற்றச் சம்பவ இடங்களுக்கு அருகில் குற்றவாளிகள் பயன்படுத்திய கைபேசி எண்களை வைத்தும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உக்கடம் GM நகரைச் சேர்ந்த சபில் மற்றும் சம்வர்தன் ஆகியோர் என தெரிய வந்தது.
மேற்படி இருவரையும் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சபில் மற்றும் சம்வர்தன் ஆகியோர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் கீரணத்தம் பிரிவில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசாரின் வாகனத்தைக் கண்டு தப்பிப்பதற்காக அதிவேகமாக வாகனத்தை ஒட்டி விபத்தாகி கால்கள் உடைந்தது.
மாவுக்கட்டு
மேலும், இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒவ்வொரு சம்பவத்திலும் இருவரும் போலீசாரை திசை திருப்புவதற்காக ரயில்வே டிராக் வழியாக நடத்து வந்து பல்வேறு தேதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடி பாப்பநாயக்கன் பாளையம்ம், R.S புரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், பறித்த தங்க செயின்களில் ஒரு பகுதியை விற்று பணமாக்கி இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்களையும், தங்கச் செயின்களையும் கைப்பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.