கோவை: கோவையில் சாலையோரம் சிறுநீர் கழித்த விற்பனை பிரதிநிதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு எல்லை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளைஞர். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில் சரவணம்பட்டி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். மருதம் நகர் அருகே வந்த போது தனது பைக்கை சாலை ஓரம் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென சரத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த வாலிபர்கள், சரத்குமாரிடம் இருந்த ரூ.500 பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து சரத்குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது கோவையை சேர்ந்த ரவிந்திரன் என்கிற ரவி (25) மற்றும் தேனியை சேர்ந்த சரவணக்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர். தலைமறைவான ரவிந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.