Header Top Ad
Header Top Ad

11 ஆண்டுகளுக்குப் பின் மருதமலை கும்பாபிஷேகம்: என்னென்ன ஏற்பாடுகள்… அறங்காவலர் சிறப்புப் பேட்டி!

கோவை: மருதமலை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

இக்கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் குடமுழுக்கு விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதனிடையே 11 ஆண்டுகளுக்குப் பின், திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Single Content Ad

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து, நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் வாசகரும், சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலருமான மகேஷ்குமார் கூறியதாவது:-

அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுரம், மூலவர் சன்னதி விமானம், முன் மண்டபம், படிக்கட்டில் உள்ள அனைத்து மண்டபங்கள், ஆதி சன்னதி மண்டபங்கள், உட்பட திருக்கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் வர்ணம் பூசும் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன.

பெரும்பாலும் இந்தப் பணிகள் உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் குறித்து காவல்துறை துணை ஆணையர், கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

விழாவின் போது வாகனங்களை மலைப் பாதையில் அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் விழாவுக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால், மேலே பார்க்கிங் வசதி இருக்காது. அதோடு, மக்கள் அந்த இடத்தில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு இருக்காது.

எனவே, கோவில் நிர்வாகம் பிரத்யேக வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் இரவு முதலே வந்து தங்கி கும்பாபிஷேக நிகழ்வைக் காண்பார்கள் என்பதால் அவர்களுக்குரிய வசதிகளை கோவில் நிர்வாகமும், போலீசாரும் மேற்கொள்ள உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை படிக்கட்டுகள் மூலம் எப்படி அழைத்துச் செல்வது, எங்கெங்கு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளோம்.

இவ்வாறு அறங்காவலர் மகேஷ்குமார் கூறினார்.

கோவைக்கான அரசு அறிவிப்புகள், மின்தடை அறிவிப்புகள், செய்திகளை அறிந்து கொள்ள News Clouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 👇

Recent News

Single Sidebar Ad

Latest Articles