கோவை: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நீலம்பூர் காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண தயார் நிலையில் உள்ளது.
கோவை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சூலூர் காவல் நிலையம் விரிவான எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் போலீசாருக்கு சவால் ஏற்பட்டது.
மேலும், பொதுமக்கள் புகார்களை அளிப்பதிலும், அதற்கான தீர்வு காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், போலீஸ் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
கிறிஸ்துமஸ் அலங்கார Lights உங்கள் வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கும்; இப்போதே வாங்கிட கீழே கிளிக் செய்யவும்.


இதனிடையே சூலூர் காவல் எல்லையைப் பிரித்து நீலம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக ரூ.4.80 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சூலூர், அன்னூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைப் பிரித்து, நீலம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் உருவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அரசூரை அடுத்த சங்கோதிபாளையம் மகளிர் கூட்டமைப்புக் கட்டடத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலம்பூர், அரசூர், முத்துக்கவுண்டன் புதூர், ராசிபாளையம், கோவில்பாளையம், வெள்ளானைப்பட்டி, அன்னூர் சில பகுதிகள், நாரணாபுரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்கள் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட உள்ளன.
இந்த காவல் நிலையத்தில், ஒரு காவல் ஆய்வாளர், 3 உதவி ஆய்வாளர்கள், 40 போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். விரைவில் நீலம்பூர் காவல் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


