கோவை: கீர்த்தி சக்ரா ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின்
33ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாயக்கன்பாளையத்தில்
மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ வீரர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 33ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சிறப்பு மரியாதை செலுத்தினர்.
கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் வெங்கிட பெருமாள். இவரது மகன் கண்ணாளன் கென்னடி.இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993-ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்சாபாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற போது அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.
தனிமனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக இந்திய அரசு 1994ம் ஆண்டு இவருக்கு இராணுவத்தின் 2வது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.
கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் இராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இவரது நினைவிடத்தில் நடைபெற்றது 33ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியின் எம் ஆர் சி கமாண்டண்ட் பிரிகேடியர் கிருஷ்னேந்து தாஸ் அறிவுறுத்தலின் படி 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் ஜேசுதாஸ் தலைமையில் ஹவில்தார் விக்னேஷ், ஜேசுதாஸ், முத்து, நாயக் வினோத், ராகேஷ், ஆகஷ் நித்திஷ், ஜெயக்குமர் உள்ளிட்ட இராணுட வீரர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் யுனைடெட் கல்லூரி தேசிய மாணவர் படையினர், பேண்டு வாத்திய குழுவினர், கென்னடியின் சகோதரர்கள் செல்வநம்பி, அண்ணாதுரை, குப்புஜெயம் முன்னாள் ராணுவ வீரர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், கிராமப் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

