கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசாரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் நிர்மல் குமார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள லாரிகள், டெம்போக்கள் மற்றும் வேன்கள் போன்ற பொது சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானதாகும். சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றி செல்வதில் அபாயங்கள் உள்ளன.
எனவே தடை செய்யப்பட்டுள்ள சரக்கு வாகனங்களில் சட்ட விரோதமாக அதிக அளவில் மக்களை ஏற்றி அதிவேகமாக செல்வது பல நேரங்களில் விபத்திற்கு வழி வகுக்கும். அதேபோல், விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் வைக்க போலீசாரிடம் அனுமதி வாங்கிவிட்டு வேறு இடங்களில் வைப்பதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும்.
விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.