கோவை: பி.எஸ்.ஜி கல்லூரியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.ஜி மருத்துக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மாணவி பவபூரணி நேற்று முன்தினம் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று இரவு அவரது சொந்த ஊரான நாமக்கல்லுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ரவிவர்மன் இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தில் காவல் ஆணையரால் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மாணவிக்கு SCST விதியின் யின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை உள்ளிட்ட விவரங்களை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.