கோவை: வாக்கு சேகரிக்க சென்ற செந்தில் பாலாஜிக்கு ரோஜா மலர்கள் கொடுத்து சிறுவர்கள் வரவேற்றனர்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவர், பள்ளிவாசல் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்து சென்று, ஒரு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக ஆதரவாளர்கள் சிலர் அவர் மீது மலர் தூவி வரவேற்றனர். ஓரிரு சிறுவர்களும் குழந்தைகளும் ரோஜா மலர்களை கொடுத்து வரவேற்றனர். மேலும், இந்த நிகழ்வில் சமாதான புறாக்களையும் பறக்கச் செய்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, தனக்கு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். 11 வார்டுகளை உள்ளடக்கிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.
கோவை 10 சட்டமன்ற தொகுதிகளில், தெற்கு தொகுதியின் வளர்ச்சியில் சிறந்த கவனம் செலுத்தி, தொகுதியின் வளர்ச்சிக்காக நிச்சயமாக பாடுபடுவேன் என்ற உறுதியை வாக்காளர்கள் மத்தியில் வழங்குவதாக தெரிவித்தார். மக்களின் ஆதரவுடனும் உற்சாகத்துடனும் இந்த தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பதாகவும், இந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, போட்டியிடும் கட்சிகள் அந்தந்த வேட்பாளர்களை தீர்மானிக்கிறார்கள். எனவே மற்ற கட்சிகளில் யார் போட்டியிடுகிறார்கள், யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, யாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கண்காணிப்பது எங்களுடைய வேலை அல்ல; அது எங்களுக்கான பொறுப்பும் அல்ல. எங்களைப் பொறுத்தவரை, எங்களுடைய இயக்கம் வெற்றி பெற வேண்டும், முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் கோவையில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் என்று குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூட, எதிர்க்கட்சி – ஆளுங்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் அரசு திட்டங்களை வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். கோவைக்கு தொடர்ச்சியாக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
தங்களை கோவைக்கு நியமித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, தலைவர் என்ன கூறுகிறாரோ அந்த கட்டளையை நிறைவேற்றுவது எங்களுடைய பொறுப்பு என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று, இந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதிகள் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏழு தொகுதிகளில் திமுக சார்பில் நேரடியாக நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே யார் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது தலைவர் தான் என தெரிவித்தார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துச் சென்று, திமுக அரசு அமைந்த உடன் அதனை முழுமையாக நிறைவேற்றக்கூடிய பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு பல்வேறு இளைஞர்கள் வரவேற்பு வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல் தேர்தலை அவர்கள் சந்திக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம். எங்களைப் பொறுத்தவரை, எத்தனை இயக்கங்கள் போட்டியிடுகின்றன, அவை புதியதா அல்லது பழையதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டியது தான் எங்களுடைய கடமை என கருதுகிறோம். கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையிலும் சரி, தமிழகத்தைப் பொருத்தவரையிலும் சரி, திமுக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சி மீண்டும் அமையும் பட்சத்தில் கோவைக்கும் தெற்கு தொகுதிக்கும் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்ற கேள்விக்கு, தெற்கு தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை வாக்குறுதியாக தயார் செய்து உள்ளோம் என்றும், ஓரிரு நாட்களில் அதனை தெரிவிக்கிறேன் என பதிலளித்தார்.

