கோவை: தன் பெயருக்கு பின்னால் “நாயுடு” சேர்க்கப்பட்டதை தட்டச்சுப் பிழை எனக் கூறி, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி சமாளித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஸ்ரீநிதி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற அவரது சாதிப்பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஸ்ரீநிதி நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்திறுந்தார்..
அதில், நான் ஸ்ரீநிதி வெங்கடேசன் மோகன். தமிழ்நாடு பிறந்து வளர்ந்து மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள்.
தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதி அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்து எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சுப் பிழையால் தான் ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும் எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியை மட்டுமே அடையாளமாக கொண்டவள் நான் என்று கூறி சமாளித்துள்ளார்.
இவர் பல்வேறு கட்சிகளில் இருந்து மாறி அண்மையில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அது மட்டுமின்றி ஸ்ரீநிதி நாயுடுவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளரை மாற்ற கோரியும் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

