கோவை: கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை நடத்த அறிவுறுத்தி உள்ளார். அதன்படி கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 4 ஆட்டமாக நடக்கிறது.
மொத்தம் 334 முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றன.
வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறும் முதல் கட்ட முகாமில் 120 முகாம்கள நடக்கின்றன.
அதன் பிறகு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக 96 முகாம்கள் செப்டம்பர் 14 வரை நடைபெறுகிறது. அதன் பிறகு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 96 முகாம்களும் நான்காவது கட்டமாக அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 24 முகாம்களும் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகளில் 66 இடங்களிலும் 7 நகராட்சி பகுதிகளில் 50 இடங்களிலும் 66 பேரூராட்சிகளில் 102 முகாம்களும், நகரை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் 82 முகாம்களும் நடைபெறுகிறது.
இந்த முகாம் நடைபெறுவதை ஒட்டி 1694 களப் பணியாளர்கள், பொது மக்களுக்கு உதவும் வகையில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வீடுகள் தோறும் இதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் மருத்துவ முகாம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் போன்ற பணிகளும் நடைபெறுகிறது. முகாம் நடைபெறுவது குறித்து ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் புதிய சொத்து வரி, சொத்து வரி மாற்றம், ரேஷன் கார்டு போன்றவற்றிற்கும் பொதுமக்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இ-சேவை மையமும் முகாமில் செயல்படும்.
போலீசார் சார்பில் May I Help You என்ற உதவி திட்டமும் இதில் செயல்படுகிறது.
எனவே பொதுமக்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொள்வதாக கூறினார்.