கோவை: மருதமலை முருகன் கோவிலில் சாமியார் வேடமணிந்து வந்த நபர் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்கான பணிகளை கோவில் நிர்வாகத்தினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
கும்பாபிஷேக விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.
Advertisement

வெள்ளி வேல் திருட்டு
இதனிடையே கோவிலுக்கு சாமியார் வேடமணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர், மூலவருக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரம் கொண்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச் சென்றுள்ளார்.
நேற்று மதியம் 12 மணிக்கு அரங்கேறிய திருட்டு சம்பவம் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், கோவிலில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.