கோவை: வேட்பாளரை கண்டுபிடிக்கவே விஜய் சிரமப்பட்டுள்ளார் என எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் , இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் கேரளா கிளம்பினார்.
இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்தார். அப்பொழுது பேசிய அவர் தேர்தல் களம் உற்சாகமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இன்றைய சூழலில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உட்பட பல்வேறு விஷயங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால் மக்களுக்கான திட்டங்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். கோவை , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 21 தொகுதியும் முழுமையாக அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
தவெக விஜய் திடீரென வருகிறார் , 10 நாட்களாக அவர் களத்தில் இல்லை எனவும், இன்று வந்து வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார் , வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே அவர் சிரமப்பட்டு இருக்கின்றார் என விமர்சித்தார். போட்டி திமுகவுக்கும், அதிமுகவிற்கும் தான் இந்தமுறை, கண்டிப்பாக திமுக வர முடியாது எனவும் தெரிவித்தார்.

