கோவை: கோவை தெற்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் போது அது விவிஐபி தொகுதியாக மாறும் என்று தவெக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் கணிசமான வாக்குகள் வாங்குவார் என்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய், திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
தேர்தல் போட்டி தொடர்பாக மதுரை பிரச்சாரத்தில் பேசிய விஜய், “ஒவ்வொரு தொகுதியிலும் நானே நிற்பதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வெண்டும்” என்று பேசியிருந்தார்.
ஆனால் அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை இதுவரை விஜய் அறிவிக்கவில்லை.
கோவையில் விஜய் போட்டி?
இதனிடையே கோவை தவெக நிர்வாகிகள் உக்கடம் சுற்றுவட்டாரத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் அவர்கள், “கோவை தெற்குத் தொகுதி விஐபி தொகுதியாக இருந்திருக்கலாம்! ஆனால் கோவை தெற்குத் தொகுதியில் முதல்வர் வேட்பாளராக நீங்கள் களம் காணும் போது தான் அது விவிஐபி தொகுதியாக மாறும்.
வெற்றியை தெற்கில் இருந்து தொடங்குவோம் அண்ணா. உங்கள் வெற்றியை எதிர்பார்க்கும் கோவை தெற்குத் தொகுதி வாக்காளர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
திடீரென தவெக.,வினர் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளது, விஜய் தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறாரா? அல்லது இவர்களாகவே போஸ்டர் ஒட்டி விஜய்யை அழைக்கிறார்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் கமலஹாசன் போட்டியிட்டார். இது தமிழகத்தில் விஐபி தொகுதியாக பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக வேட்பாளர் வானதி கமலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


