கோவையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருந்தாலும், இந்த கோடை வெயிலைச் சமாளிக்க, ஒரு நிம்மதியான குளியல் போட்டாத்தான் ஆகும்.
அதுவும், இயற்கையாக உருவாகி, மலை, மேடு, பள்ளங்களில் பாய்ந்தோடும் அருவியில் குளிப்பது என்பதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு.
மிகப்பெரிய நகரமான கோவையில், சிறுவாணியை அடுத்துள்ள கோவை குற்றாலத்தைத் தவிர்த்து, பிற அருவிகள் பற்றி பொதுவாக பெரும்பாலானோருக்கு அரிய வாய்ப்பில்லை.
அந்த அருவிகள் அவ்வளவு பிரபலமாகாததே இதற்குக் காரணம்.
இந்த நிலையில், கோவையில் உள்ள அருவிகள் குறித்து தான் தற்போது நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
குரங்கு அருவி

கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை செல்லும் வழியில் சுமார் 60 கி.மீ., தொலைவில் உள்ள அருவி தான் குரங்கு அருவி. குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ ஏற்ற இடம். அருகிலேயே ஆழியாறு அணை அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும்.
சின்னக்கல்லாறு அருவி

இதுவும் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட ஓர் அருவியாகும். கரடு முரடான பாதை வழியாகத்தான் சின்னக்கல்லார் அருவிக்குச் செல்ல முடியும். இந்தியாவில் அதிக மழைப் பொழிவை 3வது பகுதி இதுவாகும். எனவே, இங்கு எப்போதும், குளிர்ச்சியான காலநிலையே நிலவும். இந்த அருவி இருக்கும் பகுதியில் தான் சரத்குமாரின் சூரிய வம்சம் பாடல் படமாக்கப்பட்டது.
கோவை குற்றாலம்

கோவையின் ஒரு கடைசி எல்லையாக இருப்பது கோவை குற்றாலம். சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ள ஓர் அற்புதமான அருவியாகும். கோவை மாநகரில் இருந்து 37 கி.மீ., தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. உயர்ந்த மலையிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்ப்பதே தனி அழகு. கோவையின் பிரதான சுற்றுலா தளமாக இது அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மாலை 5 மணிக்குப் பிறகு இங்கு அனுமதி கிடையாது.
வைதேகி அருவி

கோவை மாநகரிலிருந்து குறைந்த தொலைவில் இருக்கும் அருவியாக இருப்பது வைதேகி அருவி. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகே தனிதான். தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி அருவி, கோவில் கண்டி அருவி என்பது இயற்பெயராகும். விஜயகாந்திற்கு பெயர் வாங்கிக் கொடுத்த வைதேகி காத்திருந்தாள் படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டதால், அதன் பிறகு இதனை வைதேகி அருவி என்று பெயர் பெற்றுள்ளது. இந்த அருவிக்கு தற்போது வனத்துறை அனுமதி வழங்குவதில்லை.

